சனி, 10 அக்டோபர், 2015

ஜாக்டோ வெற்றி

அக்டோபர் எட்டு - நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வாய்ப்பாய் அமைந்தது....

எங்கள் நிலையறிவீர்.


இவர்களுக்கு என்ன குறைச்சல்...?
எதுக்காக இந்த வேலை நிறுத்தம் ...?
பொதுப்பிரசினைகளுக்கு ஏன் போராட வரவில்லை...?
மாணவர்கள் நலன் .....பள்ளி நலன் குறித்து ஏன் போராட வில்லை...?
உங்கள் பிள்ளைகளை எங்கே படிக்க வைக்கிறீர்கள்...?
என்று கேட்கும் அனைத்து நண்பர்களுக்கும்
பதிலளிக்க வேண்டியது எமது கடமை...

எங்களுக்கு எந்த குறைவும் இல்லை ஆனால் நாங்கள் மாதந்தோறும் செலுத்தும் பங்களிப்பு ஓய்வூதிய முன் வைப்பு தொகையை  மத்திய அரசிடம் இது நாள் வரையிலும் செலுத்தவில்லை...இதனால் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தினசரி வாழ்க்கைக்கு அல்லாடுகிறார்கள்.....இறந்தவர்களின் குடும்பத்திற்கு அவர்கள் செலுத்திய தொகை கூட வழங்கப்படவில்லை...இது குறையா நிறையா...!

சனி ஞாயிறு சிறப்பு வகுப்பு ..காலாண்டு அரையாண்டு ....ஆண்டு இறுதி விடுமுறை...உள்ளிட்ட நாட்களில் மாணவர் நலனையும் அரசுப்பள்ளியின் வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு பணியாற்றுகிறோமே...அதற்கு கூடுதல் ஊதியம் கேட்கவில்லை...ஒரே  பணியை செய்யும்  மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு  அனைத்து  மாநிலங்களிலும் ஒரே மாதிரி ஊதிய நிர்ணயம் செய்யப்படும்போது ....இடைநிலை ஆசிரியர்களை மட்டும் போதுமான கல்வித்தகுதி இல்லை என்று சொல்லி அவமானப்படுத்தி .....தற்போது தமிழக கல்விநிலையை உயர்த்திக்கொண்டிருக்கும்  இவர்களை இழிவுப்படுத்தி ஊதியத்தை மிகக்குறைவாக வழங்குவதை நிறுத்தி பழைய  ஊதிய அளவுகோல் படி ஊதியம் கேட்பது  குறையா நிறையா...!!

சிறப்பு நலத்திட்டங்கள் ....என்று மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களை  பெரும்பாலும் தலைமை ஆசிரியர்கள் சொந்த செலவில் பள்ளிக்கு எடுத்துச்சென்று ஒரு பிள்ளைக்கு விடுதல் இருந்தாலும் உடனடியாக பெற்று வழங்குவதோடு...இதற்கான பட்டியல் அனுப்புவதை இணையதளத்தில் நள்ளிரவு வரை தட்டச்சு செய்து அனுப்புவதும்...பெற்றோர் இல்லாத நிகழ்வுகளில் மருத்துவம் , காலை உணவு , எழுது பொருட்களைக்கூட வாங்கித்தரும் ஆசிரியர்களும் இங்கே பெற்றோர்களாய் நடந்துகொள்வதுண்டு இது  மாணவர் நலனில்லையா ...பொது சிந்தனையில்லையா... இது குறையா  நிறையா..!!!
அரசுப்பள்ளியில் தம்பிள்ளையை படிக்க வைப்பதில்லை தனியார் பள்ளிகளை நோக்கி ஏன் ஓடுகிறீர்கள் என்று எம்மை கேட்கும் உங்களிடம் கேட்கிறேன்....தற்போது பணியாற்றும் இளந்தலைமுறை ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில்தான் படிக்கிறார்கள் என்பதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன்...என் பிள்ளை அரசுப்பள்ளி மாணவன்...இது குறையா...! நிறையா...!!
மாணவர் அனைவரும் தம் பிள்ளைகள் என்ற நோக்கோடு நாங்கள் இருப்பதால்தான் ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சியும் மெருகேறி வருகிறது என்பது உங்களுக்கு தெரியும் தானே....புதிய கண்டுபிடிப்புகள் அறிவியல் சார்ந்த நிகழ்வுகளில் தேசிய அளவில் ஏன் சாதிப்பதில்லை என்கிறீர்கள்....
எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளனர் என்பதை மறந்தே விட்டீரோ...?....குடிப்பிரச்சினை....மாணவர் சிறுகுற்றங்கள்....சிறு பிள்ளைகள் மீதான ஒடுக்குமுறைகள் ஆகியவற்றில் துணிச்சலோடு எதிர்நின்று சட்டதிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் கற்றலில் குறைபாடுகள் இருப்பினும் வருங்கால சமூகத்தில் இவர்கள் குறைமனிதராய் இல்லாமல் முறைப்படுத்தும் நாங்கள் செய்யும் இத்தகைய பணிகள் குறைவானதா...நிறைவானதா...!!
கருத்துகளை அள்ளித்தெளிக்கும் அருமை நண்பர்களே ....ஒரு நிமிடமேனும் நீங்கள் எங்கள் நிலையை அறிந்து அப்புறம் தலையங்கங்கள் எழுதுங்கள்.....
நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம்...உங்களின் முன்னே இருக்கும் சமூக கருவேல மரங்களை வெட்டுங்கள்...எங்கள் முன் கிடக்கும் காய்ந்த முட்களை நாங்கள் அகற்றி கொள்கிறோம்....
எங்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும்....நண்பர்களே இனியேனும் தவிருங்கள் உங்களின் நியாயமற்ற விமர்சனங்களை....
அன்புடன்
ஆ.மணிகண்டன்
மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

பிரபலமான இடுகைகள்