புதன், 30 செப்டம்பர், 2009

ஒளி படைத்த கண்ணினாய்.... வா....



அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இணைய தளத்தில் வெளியான நாளன்று, தமிழகம் முழுதும் விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது. அங்கும் இங்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கள் பெயர் வந்திருக்கிறதா என்றும் நண்பர்கள் பெயர் வந்திருக்கிறதா என்று விசாரிப்பதுவுமாய் இருந்தார்கள்.


நான் [புகழ். ஜெய பிரபு, தஞ்சை ஒன்றிய தலைவர்] மற்றும் ஜெயசெல்வன்[ தஞ்சை மாவட்ட பொருளாளர்] இருவரும் இணையதளத்தில் எங்கள் இருவர் பெயரையும் காணாது , அதிர்ச்சியடைந்தோம். அவரும் நானும் கிட்டத்தட்ட ஒருவருக்கொருவர் சந்தேகப் பட்டுக் கொண்டோம் என்றே சொல்லலாம்- ஏனென்றால் நாங்கள் இருவரும் தான் ஒன்றியம் முழுக்க விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களை பெற்று சரி செய்து அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று அனுப்பி வைத்தோம்.

நடந்தது நடந்து விட்டது, எந்த புண்ணியவான் செய்த நற்செயலாலோ நம் விண்ணப்பங்கள் காணாமல் போய்விட்டது என்றாலும் மாநிலத் தலைமை மேல் முழு நம்பிக்கையோடு, விண்ணப்பித்தமைக்கான அத்தாட்சிகளோடு அன்று இரவே சென்னைக்கு பயணமானோம்.

நம் தலைவர் தியாகராஜன் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டோம். விவரங்களை தெரிவித்தோம். மாலை 6 மணிக்கு பெருங்குளத்தூரில் இருக்கும் மாநிலத் தலைமை அலுவலகத்தில் தம்மை வந்து சந்திக்குமாறு சொன்னார். சென்றோம். வாயிலில் காத்திருந்தோம்.... அரைமணி நேரத்தில் வந்தார். விவரம் கேட்டார் சொன்னோம். சிரித்துக்கொண்டு தலையில் அடித்துக் கொண்டார்.

என்னப்பா இது? செயல் வீரர்களுக்கா இந்த நிலைமை ?
என்று கூறிக் கொண்டே, விண்ணப்பித்தமைக்கான ஆதாரங்களைப் பெற்று அவற்றை ஒரு வரி விடாமல் சரி பார்த்தார்.

கவலைப்படாதீர்கள். நான் அதிகாரிகளை சந்தித்து சரி செய்கிறேன் என்றவர், நீங்கள் இன்றே புறப்பட வேண்டுமா? இரண்டு நாட்கள் தங்கி இருந்து
இன்ன பிற மாவட்டங்களிலிருந்து வரவிருக்கக் கூடிய விடுபட்டுப் போன ஆசிரியர்களின் பெயர்களை சரி பார்க்கும் பணியில் தம்முடன் ஈடு பட முடியுமா ? எனக் கேட்டார் .

மறு பேச்சின்றி சம்மதித்தோம்.

இரவு விருந்துண்ண ஒரு விருந்துக்கு எங்களையும் அழைத்துச் சென்றார்.

இரவு அலுவலகத்திலேயே தங்கிக் கொள்ளுங்கள் நம் நலனுக்காகத்தான் இந்த அலுவலகம் என்று அன்போடு கேட்டுக் கொண்டார்.

இரண்டு நாட்களும் அவருடன் பழகி பேச எமக்கு கிடைத்தது சிறந்த வாய்ப்பு என்றும் , சங்கத்தினுடைய கட்டுக் கோப்பான செயல்பாடுகளை நேரில் கிடைத்த வாய்ப்பாகவும் நான் கருதுகிறேன்.

சங்கத்தினுடைய செயல் வீரர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் திரு தாமோதரன், திரு.ரமேஷ், திரு.மணிகண்டன் இன்னும் நிறைய பேர் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாட்களும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொறுப்பாளர்களும் ஆண் ஆசிரியர்களும், பெண் ஆசிரியர்களும் தங்கள் பெயர்களும் பிறர் பெயர்களும் விடுபட்டுப் போய்விட்டதை முறையிட்டார்கள். நம்மாநிலத் தலைவர் அவர்கள் அனைவருக்கும் இன் முகத்தோடு பதிலளித்து ஆறுதல் கூறி முறையான விண்ணப்பங்களை சிரத்தை எடுத்து சரி பார்த்து, சரியான விண்ணப்பங்களை மட்டும் சேர்க்க முயற்சிப்பதாக உறுதி அளித்ததும், அருகிலிருக்கும் அவரது மூன்று செல் பேசிகளும் மாறி மாறி ஒலித்த போதும் எடுத்து கனிவோடு பதிலளித்ததும் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக அவரது வியக்க வைக்கும் நினைவுத்திறன்!


ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் பொறுப்பாளர்கள் வரும்போதும், எந்த மாவட்டத்திலிருந்து எவ்வளவு உறுப்பினர் சந்தா, ஆயுள் சந்தா, நாட் குறிப்பிற்கான தொகை வந்திருக்கிறது வர வேண்டி இருக்கிறது என்றும் எந்த குறிப்பினையும் பார்க்காமல் புன்முறுவலோடு சொன்னவிதம், அவரது தலைமைப் பண்புக்கு தலை சிறந்த எடுத்துக்காட்டு. இந்த கலந்தாய்வு நெருங்க நெருங்க அவருக்கு உரக்கமேன்பதே இல்லாமல் போனது என்பதை அவர் அருகிலிருந்து பார்த்தவர்கள் நன்குணர்வார்கள்.


உணவும், நீரும் கூட அருந்தாமல் தொடர்ச்சியாக பணிபுரிவது அதுவும் தன்னலமின்றி தன் சக ஆசிரியருக்காக மட்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நானே ஒரு நாள் பரிதாபப் பட்டு என்று சொல்லக் கூடாது- என் சக ஆசிரியர்களின் நலனுக்காக உழைக்கும் ஒரு உன்னத தலைவன் உடலால் சோர்ந்து போய்விடாது இருக்க வேண்டும் என்பதற்காக தேநீர் கடையை தேடிச் சென்று தேநீரும் குடிக்க நீரும் வாங்கி வந்து வழங்கினேன்.



அவரது கண்கள் அவ்வப் பொழுது உண்மையான நேர்மையான உள்ளங்களைத் தேடி அலைகின்றன. எல்லோரையும் அவர் அரவணைத்துச் சென்றாலும் அன்போடு நடந்து கொண்டாலும், பொறுப்பாளர்களின் நடவடிக்கையை பிறரிடம் பேசிக்கொண்டே உன்னிப்பாக கவனிக்கிறார். சிறிது தவறு செய்தாலும் உரிமையோடு கடிந்து கொள்கிறார். அவரது நடவடிக்கைகள் வெளிப்படயானதாகவே இருக்கின்றன.


பிற சங்கத்தை சேர்ந்த ஆசிரியாரானாலும் அவரும் ஆசிரியர் தான் என்றும், எந்த ஆசிரியரின் நலனும் துளியும் பாதிக்கப் படக் கூடாது என்பதில் முழு அக்கறை உள்ளவராகவும் நம் தலைவர் இருக்கிறார்.

இப்பொழுது நான் சொல்வதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்... இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குள்ளாக நமது தலைவர் அவர்கள் ஆசிரியர் நலனில் அக்கறை கொள்ளும் தலைவர்களில் ஒரு சிறந்த தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவார் என்பது இந்த அடியேனின் கணிப்பு.

அவரை நேரில் கண்டு பழகி பேசி வந்ததிலிருந்து வான் புகழ் வள்ளுவனின் குறளொன்று என் ஆழ் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...



"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகழ்வெல்லல் யார்க்கும் அரிது. "



- இக கட்டுரையை முழுதாய் படித்து முடித்தபின் உங்களுக்குள்ளும் அசரீரியாய் இந்தக் குறள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.



-தஞ்சையிலிருந்து, புகழ். ஜெயபிரபு

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

மனமார்ந்த நன்றிகள்...



கடந்த செப்டெம்பர் மாதம் 25 மற்றும் 26 தேதிகளில், சென்னையில் அலகுவிட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வு, சைதாப்பேட்டை, அசோக்நகர் மற்றும் எழும்பூர் ஆகிய இடங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

எழும்பூரில் தொடக்கக் கல்வித் துறையிலிருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு மாற விண்ணப்பித்திருந்த ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பனிமாறுதலுக்கான ஆணைகளை வழங்கி, சிறப்புரையாற்றிய நம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தமிழக அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் தரம் உயர எடுத்துவரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
மாண்பு மிகு தமிழக முதல்வர், டாக்டர். கலைஞர் அவர்கள் ஆசிரியர்களின் பால் கொண்டுள்ள அன்பால் அவர்களின் நலனில் என்றென்றும் அக்கறை கொண்டுள்ளதையும் அதன் காரணமாகவே தொடக்கக் கல்வித் துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுவதற்கு ஆசிரியர்களிடமிருந்து கோரிக்கை எழுந்தவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் இப்பொழுது இக்கலந்தாய்வு நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் நமது மாநிலத் தலைவர் திரு. கு. தியாகராஜன் அவர்கள் அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கிட தமிழக அரசினை தொடர்ந்து பல்வேறு சூழ்நிலைகளில் வலியுறுத்தி வந்ததையும் நினைவு கூர்ந்து பாராட்டினார். அப்பொழுது நம் மாநிலத் தலைவர் அவர்களும் மேடையில் அமர்ந்திருந்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினுடைய செயல்பாடுகளையும் வாழ்த்திப் பேசிய அமைச்சர் அவர்கள் தொடக்கக் கல்வித் துறையில் இக்கலந்தாய்வின் காரணமாக உண்டாகும் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப் படும் என்றும் உறுதி தெரிவித்தார்.

இந்த அலகு விட்டு அலகு மாறுதல் மூலமாக பள்ளிக் கல்வித்துறைக்கு மாற நியமன ஆணைகளை பெற்றுச் சென்ற அனைத்து ஆசிரியர்களும் ஆனந்தத்தால்
நமது மாநிலத் தலைவர் அவர்களையும் , நமது சங்கத்தின் மாநில, மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்களையும் பாராட்டி இப்போதும் தொடர்ந்து நன்றி தெரிவத்த படியே இருப்பதன் மூலமாக, நம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் எத்தகைய வரலாற்று சாதனையை புரிந்திருக்கிறது என்பதை கண்கூடாக தெரிதுகொள்ளலாம்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

அலகு விட்டு அலகு மாறுதலுக்கான பணிச்சான்று

அன்பு ஆசிரியர்களே வணக்கம். வரும் 25.09.2009 முதல் நம் அனைவரின் கோரிக்கையை ஏற்று சென்னையில் நடைபெற உள்ள அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வின் போது, சமர்பிக்கப் பட வேண்டிய பணிச்சான்றுக்கான படிவம் இத்துடன் இரு வடிவங்களில் [ pdf file, image file] இணைக்கப் பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம். கலந்தாய்வில் கலந்துகொள்ளவிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நம் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அடியில் காணும் இணைப்பை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அல்லது மேற்காணும் இமேஜ் பைலை பயன்படுத்தி கொள்ளவும் Attached Files:

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா...



தமிழக அரசியலில் ஒரு மாற்று எனக் கொண்டாடப்படும், அறிஞர் அண்ணா என எல்லோராலும் விழிக்கப்டும், அறிஞர் சி.என் அண்ணாத்துரை அவர்களின், 101வது பிறந்த நாள் இன்று. அண்ணா நூற்றாண்டு நிறைவு நாளையொட்டி தமிழக மெங்கும், கோலாகல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன எனத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, இன்று காலையிலேயே சென்னை வள்ளுவர் கோட்டம் முன்னேயுள்ள அண்ணாசிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தமிழகமெங்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்புச் செய்தி...

அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வு , இம்மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெறும் என்று தகவல் வந்துள்ளது. இச்செய்தியை உறுதி செய்து கொண்ட பின் மேலும் விவரங்களை தெரிவிக்கிறோம்.

வாழ்த்துக்கள்...




தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும், நமது தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த திரு. k. பால முருகன் M.A., M.PHIL., B.ED., [ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் ] அவர்களுக்கு தஞ்சை, ஹோஸ்ட் லயன்ஸ் கிளப் நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியுள்ளது.

அவரது பணி மேலும் சிறக்க நம் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.


சனி, 5 செப்டம்பர், 2009

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..






சமுதாய சிற்பிகளே .....


அறிவுலகின் ஆசான்களே...




நல்ல தலைமுறைகளை


நாள்தோறும் உருவாக்கிடும்


நல்லோரே.....




வாழ்க நீ வளமோடு...

வியாழன், 3 செப்டம்பர், 2009

அஞ்சலி ......




ஆந்திர முதல்வர் , திரு. ராஜசேகர ரெட்டி அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி , எம் அனைவரையும் மீளாத் துயரில் மூழ்கடித்து விட்டது. அன்னாரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , நம் தமிழக அரசு 04/09/09 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

பல ஏழை , எளியோர்க்கு தன் பல்வேறு நலத் திட்டங்கள் வழியாக வாழ்வளித்து, சிறந்த அரசை நடத்தி வந்த திரு. ராஜசேகர ரெட்டி அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தார்க்கும், அவரோடு இறந்த மற்றவர்களின் குடும்பத்தார்க்கும், ஆந்திர மக்களுக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

பிரபலமான இடுகைகள்