செவ்வாய், 31 ஜூலை, 2012

பறப்பேன்,பறப்பேன் பறந்து கொண்டே இருப்பேன் : கலாம்



அன்பு மாணவச் செல்வங்களே,  உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.  தேர்வு முடிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும் என் அறிவுச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.  அன்பு மாணவச் செல்வங்களே, உங்கள் அனைவருடனும் நான் எழுதிய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களைச் செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒரு போதும் தவழ மாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

                                     பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழி வகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்? நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும். நீ யாராயிருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய். பினாச்சியோ என்ற கவிஞர் சொல்கிறார்-நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.

                             என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை, உழைத்துக் கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.

இதுவரை கடந்த 12 ஆண்டுகளில், நான் 1.2 கோடி இளைஞர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்கிறேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்கள் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் என்ஜினீயர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அலுவலர், ஆசிரியர், தொழில்முனைவோர் ஆகப் போகிறீர்கள் என்று கேட்டேன். சுமார் நூறு பேர் கையைத் தூக்கினார்கள். எத்தனை பேர் சந்திரனுக்கும், வியாழன் கிரகத்திற்கும், போக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். அனைவரும் கையைத் தூக்கினார்கள்.

                                                    எத்தனை பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். 50 பேர் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள். அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம், நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு மாணவன், இந்தியாவை 10 ஆண்டுகளுக்குள் வளர்ந்த இந்தியாவாக மாற்றுவேன் என்று சொன்னான், ஒரு மாணவி சொன்னாள், லஞ்சத்தை ஒழிப்பேன் என்று. இன்னொரு மாணவன், இளைய சமுதாயத்துக்கு, "என்னால் முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்து, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன் - அப்படியென்றால் இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்' என்ற நம்பிக்கையைக் கொடுப்பேன் என்று கூறினான். எங்கு சென்றாலும் இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன்.

                                                                 நீ தனித்துவமானவன்: தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பைப் பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் விமானங்களைப் பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியைப் பார்க்கும்போது அலெக்ஸôண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.

                                                              ஏன் கடலின் நிறம் நீலமாக இருக்கிறது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனிலிருந்து கொல்கத்தாவிற்குப் பயணம் செய்யும்போது ஒரு விஞ்ஞானிக்கு அந்தக் கேள்வி வந்தது. அந்தக் கேள்விக்கான பதில்தான் "ஒளிச்சிதறல்". அதுதான் ராமன் விளைவிற்கான நோபல் பரிசை சர். சி.வி. ராமனுக்குப் பெற்றுத் தந்தது. இந்த நூற்றாண்டில் அகிம்சா தர்மம் என்ற கத்தியில்லா, ரத்தமில்லா ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று, உலகிற்கே அகிம்சா தர்மத்தைப் போதித்தவர் மகாத்மா காந்தியடிகள். ஆக, ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள்.

                                                                                       இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால், இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது, ஏனென்று தெரியுமா? உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் தனித்துவமானவன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். விவேகானந்தர் சொன்ன இரண்டு விஷயங்கள் என் நினைவுக்கு வருகிறது.

My name should not be made prominent.
It is my ideas that I want to see realised.

எனது பெயர் பிரபலபடுத்தப்படக்கூடாது, எனது ஆலோசனைகளும் தத்துவங்களுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

All power should not be made prominent.
It is my ideas that I want to see realised.

அப்படி என்றால், உன்னிடம் உள்ள திறமையை எண்ணிப்பார். எழுந்து உன் ஞானத்தை வெளிப்படுத்து. அதன் மகத்துவத்தை நீ உணர்ந்த அடுத்த நிமிடம் உலகம் உன்னிடம் வசப்படும். என்ன ஓர் அருமையான கருத்து.மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களைச் சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத் திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தித் திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர்.
ஆனால், நாட்டில் பெரும் சதவிகிதம் பேர் படிப்பின் பல்வேறு நிலைகளில் கல்வி கற்க இயலாத சூழ்நிலையில் மற்ற வேலைகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கு ஆளாகின்றனர். நாட்டில் இன்றைய சூழ்நிலையில் பல்வேறு கவனச் சிதறல்கள், வறுமை, படிப்பிற்கேற்ற வேலை, வேலைக்கேற்ற படிப்பும், சிறப்பு பயிற்சியும் இல்லாத சூழல். உலகமயமாக்கலினால் ஏற்படும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேற்றுமை, மாறி வரும் குடும்பச்சூழல், மாற்றுக் கலாசார மாற்றம் நம் இளைஞர்களை வேகமாக மாற்றும் சூழல் இன்றைக்கு நாட்டில் நிலவுகிறது. இத்தனையும் தாண்டி நமது நாடு, நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டிற்கேற்ற வளர்ச்சி முறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பழக்க வழக்கங்கள், இவைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கால முறைக்கு ஏற்றாற்போல் நம்மை நாம் அறிவுப்
பூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும். நாம் நமது முகவரியை இழக்காமல் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். பணி செய்து கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும்போது நமக்கு வாழ்வில் ஓர்  லட்சியம் வேண்டும். அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும்பெரும் லட்சியங்கள் தோன்றும். பெரும் லட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.

அமைதியைத் தேடி...
சுமுகமான, மேடு பள்ளம் இல்லாத ஓர் அறிவார்ந்த, அமைதியான, மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்ற தேடலின் ஒரு பகுதியாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். 2003-ம் ஆண்டு, நான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில், 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தவாங் என்ற இடத்திற்குச் சென்றேன். ஒரு நாள் முழுதும் இருந்து, அங்கு புத்த பிட்சுகளைச் சந்தித்தேன். கடுமையான குளிரில், வாழ்வதற்கு மிகவும் சிரமப்படக்கூடிய சூழல் இருக்கும் அங்கு அனைவரும் சிரித்த முகத்துடன் புன்னகை தவழ வீற்றிருப்பது கண்டேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு எப்படி சந்தோஷமும், சாந்தியும் நிலவுகிறது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அங்கிருக்கும்
தலைமை புத்த பிட்சுவிடம் கேட்டேன், இது எப்படி சாத்தியமாகும் என்று. அதற்கு அவர், நீங்கள் நாட்டின் குடியரசுத் தலைவர். உங்களுக்குத் தெரியாதா? என்றார். நான் விடவில்லை. இல்லை, நீங்கள் எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அதற்கு அவர் சொன்னார். இந்த உலகத்தில், நமக்குப் பல்வேறு பிரச்னைகள் - நம்பிக்கையின்மை, சுயநலம், சமூக, பொருளாதார வேறுபாடு, கோபம், வெறுப்பு அதன் மூலமாக வன்முறை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், புத்ததவஸ்தலம் என்ன செய்தியைப் பரப்புகிறது என்றால், நாம்  ஒவ்வொருவரும் "நான், எனது' என்ற எண்ணத்தை நம் மனதிலிருந்து அகற்றினால், நம்மிடம் உள்ள தற்பெருமை மறையும். தற்பெருமை மறைந்தால், மனிதர்களுக்கு இடையேயான வெறுப்பு அகலும். வெறுப்பு நம் மனதைவிட்டு அகன்றால், வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு அகலும். வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு மறைந்தால், அமைதி நம் மனத்தைத் தழுவும். என்ன ஓர் அருமையான விளக்கம்! ஆனால் "நான், எனது" என்ற எண்ணத்தை எப்படி நம் மனதிலிருந்து அகற்ற முடியும்? எவ்வளவு கஷ்டமான விஷயம். இதற்கான பக்குவமான கல்வி முறையை எப்படி நாம் கொண்டு வருவது என்பதுதான் நம்மிடையே உள்ள சவால். அந்த சவாலை எப்படி சமாளிப்பது, அமைதியை எப்படி அடைவது? என்ற என் கேள்விக்கு விடை தேடிய என் பயணம் தொடர்ந்தது.

பல்கேரியா நாட்டிற்குச் சென்றேன். அங்கு கிறிஸ்தவதவஸ்தலத்திற்குச் சென்றேன். தவாங்கில் கிடைத்த செய்தியின் தொடர்ச்சியாக, அங்கு உள்ள பாதிரியார் ஒரு வாக்கியத்தைத் தந்தார். மன்னிப்பு என்ற உன்னதமான வாக்கியத்தைத் தந்தார். மன்னிப்பு என்பது எப்படி ஒரு வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும் என்பதைப் பற்றிய அருமையான
விளக்கம் பெற்றேன்.

அதன் தொடர்ச்சியாக விவேகானந்தரது பிறந்த இடத்திற்குச் சென்றேன். எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது, அங்கு எனக்குக் கிடைத்த பதில் என்னவென்றால் - கொடை. அதாவது கொடுக்கும் குணம். கொடையும் இத்தனை குணங்களுடன் கூட இருந்தால் நாட்டில் அமைதிக்கு அது வித்திடும் என்பதாகும். இந்தத் தகவலோடு அஜ்மீர் ஷரீப் சென்றேன். அங்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்றேன். அங்கு இருந்த சுஃபி பெரியவரிடம் இதே கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் "ஆண்டவனின் படைப்பில் தேவதையும் உண்டு, சாத்தானும் உண்டு. நல்ல எண்ணங்கள், நல்ல செயல்களுக்கு வித்திடும். நல்ல செயல்கள் அன்பை வளர்க்கும். அன்பு அமைதிக்கு வித்திடும்' என்றார். நல்ல செயல்களைப் பற்றி எண்ணும் பொழுது காந்திஜி வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி: காந்திஜியின் 9-வது வயதில், அவரது தாயார் அவருக்கு ஓர் அறிவுரை தந்தார்: மகனே, உனது வாழ்வில், துன்பத்தில் துவளும் யாராவது ஒருவர் வாழ்வில் நீ ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அவரைத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து,   முன்னேற்றப்   பாதையில் கொண்டு சென்றால், நீ மனிதனாகப் பிறந்ததன் முழுப் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்பொழுதும் உனக்கு அருள் செய்வார். இது பூமியில் பிறந்த அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரை ஆகும்.

மனசாட்சியின் மாட்சி
சமீபத்தில் சுவாமி சமர்ப்பண் எழுதிய "Tiya  : A Parrot's Journey Home' என்ற நூலைப் படித்தேன். சில புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. எனக்கு மிக நெருக்கமானவை. அந்தப் புத்தகங்கள் எனது தனிப்பட்ட நூலகத்தை அலங்கரிக்கும். அப்படி ஒரு புத்தகம்தான் இது. தியா என்ற புத்தகம் மனசாட்சியைப் பற்றி இருப்பதால், நம் ஒவ்வொருவரையும் தொடுகிறது. இதை மிக அழகாக எழுதியிருக்கிறார் சுவாமி சமர்ப்பண். ஓர் அருமையான பச்சைக்கிளியின் வாழ்வு, தியாவின் வாழ்க்கையை மாற்றியது என்பதுதான்.

கோபம் விவேகத்திற்கு அழகல்ல. இதைப் பச்சைக் கிளி மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை. ஆனால், இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணர்வார்கள். என்னைக் கவர்ந்த ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால்,

உன்னைப் பற்றி நீ உணர்ந்ததைக் காட்டிலும்
நீ மேலானவன் என்பதை உணர்.
உன்னைப் பற்றி நீ உணர்ந்த அடுத்த விநாடி, உனது செயல்
நீ எண்ணியதைக் காட்டிலும் மேலாகச் சாதிக்க வைக்கும்

எப்படி நாம் நமது மனசாட்சியைப் பக்குவப்படுத்துவது என்று என்னை நானே கேட்டேன். மனசாட்சி நம்மை நல்வழிக்கும் இட்டுச் செல்லும். இல்லை என்றால், அது விரும்பிய வழிக்கும் இட்டுச் செல்லும். கிளிக்குக் கிடைத்த அருமையான செய்தி என்ன? அற்பக் காரியங்களுக்காகக் கண்ணீர்விட்டுப் பொழுதைக் கழிப்பதைக் காட்டிலும், வாழ்க்கையில் செய்ய வேண்டிய நல்ல
காரியங்கள் அதிகம். இப்படிப்பட்ட இடத்தைவிட்டு வெளியேறு சீக்கிரம். என்ன அருமையான செய்தி! எண்ணம் பெரிதாக இருந்தால் நம்மால் சாதிக்க முடிவது அதிகம்.

சுவாமி சமர்ப்பண் எழுதிய புத்தகம் என் மனதை மகிழச் செய்தது. மனசாட்சியின் மனதைப் பற்றி அறிந்து கொள்ள உதவியது. மனசாட்சி என்பது, இதயத்தின் ஆத்மா, மனித இதயத்தில் இருந்து சுடர்விட்டு வழிகாட்டும் ஒரு பேரொளி. வாழ்க்கை எப்படி உண்மையோ அதைப் போன்றது அது. நேர்மைக்குப் புறம்பாக சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக் காட்டும். மனசாட்சி என்பது நமது பாரம்பரியத்தில் வந்துதித்த ஒன்று. தப்பையும், சரியானவற்றையும் நமக்கு சரியான நேரத்தில் உணர்த்தும் ஓர் அறிவார்ந்த மரபணு உண்மை. நமது குற்றங்களைப் பதிவு பண்ணும் ஒரு வாழ்க்கைப் புத்தகம். சார்பற்ற சாட்சியாக மனசாட்சி விளங்குகிறது. அது நம்மை பயமுறுத்தும், நம்பிக்கையைக் கொடுக்கும், பாராட்டும்,
தண்டனை அளிக்கும், நம்மைக் கட்டுக்குள் வைக்கும். ஒரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை.

மறுமுறை உறுத்தினால் தண்டனை. கோழை கேட்பான், இது பாதுகாப்பானதா? பேராசைக்காரன் கேட்பான்- இதனால் எனக்கு என்ன லாபம் என்று. தற்பெருமைக்காரன் கேட்பான், நான் மகானாக முடியுமா என்று. இச்சையானவன் கேட்பான், அதில் என்ன சந்தோஷம் உண்டு என்று. ஆனால் மனசாட்சி ஒன்றுதான் கேட்கும் - அது சரியா என்று. ஆனால் ஒட்டுமொத்தமான பதில் என்ன? தன் மனசாட்சிப்படி நேர்மையாக நடப்பது ஒன்றுதான். இதிலிருந்து என்ன விளங்குகிறது என்றால், சிறு வயதில், இளம் மனதில் விதைக்கும் விதை எப்படிப்பட்ட பலனைத் தருகிறது என்பதற்கு நம்மில் அனேக உதாரணங்கள் உள்ளன. எனவேதான் நாம் நமது இளைஞர்களைப் பக்குவப்படுத்தி, தயார் பண்ணினால்தான் நமது லட்சியமான, வளமான இந்தியாவை 2020க்குள் மாற்ற முடியும்.

அறிவு அற்றம் காக்கும்
எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்தது ஒரு குறள்தான். எனக்குப் பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்குவளம் கொடுத்தது. அது இது தான்...

அறிவற்றங் காக்குங் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

அதாவது, அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல்,
அதாவது கோட்டை போல் நின்று நம்மைக் காக்கும் என்பதாகும்.

பூமிக்குக் கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைக் காட்டிலும், மனஎழுச்சி கொண்ட இளைஞன்தான் மிகப் பெரிய சக்தி. இந்தியா 60 கோடி இளைஞர்களைப் பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா. எனவே மக்கள் தொகை ஒரு வகையில் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. மாணவர்களே! உறக்கத்திலே வருவதல்ல கனவு.
உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. எனவே கனவு காண்பது என்பது ஒவ்வொரு குழந்தையின், இளைஞரின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேறக் கடுமையாக உழைக்க வேண்டும், தொடர்ந்து அறிவைப் பெற, அதை தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால்   கனவு நனவாகும்.

நீங்கள் எல்லாம் வெற்றியடைவீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

நன்றி தினமணி

கை நிறைய உதவித் தொகையுடன் உயர் கல்வி வாய்ப்பு...


மத்திய அரசின் கல்வி உதவித் தொகையுடன் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளில் முக்கியமானது கிஷோர் வைக்யானிக் புரோத்ஸாஹன் யோஜனா (கே.வி.பி.ஒய்.) திட்டம். அடிப்படை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த மாணவர்களை சிறந்த ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கும் வகையில், தாராளமாக கல்வி உதவித் தொகை (பி.ஹெச்.டி-பட்டம் பெறுவதற்கு முந்தைய நிலை வரை) பெறுவதற்கான இத்திட்டத்தை மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது. இதற்கான தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் விண்ணப்பங்கள் வெளியிடப்படும். இதன்பின் தேர்வுகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெறும். நிறைவாக டிசம்பரில் தேர்வு முடிவுகள் மற்றும் தரவரிசை (ரேங்க் லிஸ்ட்) வெளியிடப்படும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விவரங்களை அறிய இணையதள முகவரி: www.kvpy.org.in

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதிச் சிறப்பிடம் பெற்றால் அவர்களுக்கு முதுகலை, எம்.ஃபில் பட்டப் படிப்பு படிக்கும் வரை மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ. 4 ஆயிரமும், இது தவிர ஆண்டு உதவித் தொகையாக ரூ. 16 ஆயிரமும் நேரடியாக வழங்கப்படும்.

பிளஸ் 2 மாணவர்கள் இந்தத் தேர்வில் சிறப்பிடம் பெற்றால், மாதம்தோறும் ரூ. 5 ஆயிரமும், இதுதவிர ஆண்டு உதவித் தொகையாக ரூ. 20 ஆயிரமும் வழங்கப்படும். மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கோடையில் சிறப்புப் பயிற்சி:  இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அட்டை வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் இஸ்ரோ, பெல்உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி மையங்களில் பயிற்சி பெறலாம்.

உயர் கல்வி வாய்ப்பு: கே.வி.பி.ஒய். திட்டத்தில் தேர்வு செய்யப்படுவோர் போபால், கொல்கத்தா, புனே, மொஹாலி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.) எம்.எஸ். முதுநிலை பட்டப் படிப்பில் (5 ஆண்டுகள்) சேர தாமாகவே தகுதி பெறுவர். இதுதவிர பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்ஸி) நிறுவனத்தில் பி.எஸ். என்ற இளநிலை பட்டப் படிப்பில் (4 ஆண்டுகள்) சேரலாம்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் "உபரி' ஆசிரியர் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

 தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு புதன்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது.

அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்துப் பாடங்களுக்கும் சம அளவில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் மாணவர் விகிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர்.
இதற்கென அமைக்கப்பட்ட குழு, பாட ஆசிரியர்களின் தேவை, ஆசிரியர் - மாணவர் விகிதம் ஆகியவற்றைக் கண்டறிந்து, உபரி ஆசிரியர்கள் மற்றும் தேவையின் அடிப்படையில் காலிப் பணியிடங்களைப் பட்டியலிட்டது. இதன்படி உபரி ஆசிரியர்கள், காலிப் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் இப் பணி முடிவடைந்த நிலையில், தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொள்ள இருக்கின்றனர்.
"அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மாநில அளவிலான சீனியாரிட்டி மற்றும் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு பணி நிரவல் நடைபெறுகிறது. அதேசமயம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் "உபரி' பட்டியலில் சேர்க்கப்பட்டால், அவர்களுக்கு பணி நிரவல் இடமாற்றம் குதிரைக் கொம்பாக இருப்பதுடன், பணியாற்றும் பள்ளியிலும் அனைத்து சலுகைகளையும் இழக்கக்கூடிய அவல நிலை இருக்கிறது' என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது:
அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும்பட்சத்தில், பல ஆண்டுகள் அனுபவமுள்ள ஆசிரியரையும் "உபரி' என்ற பட்டியலில் சேர்த்து விடுகின்றனர். இதன் மூலம் அந்த ஆசிரியர் எந்த நேரமும் வேறு பள்ளிக்கு மாற்றப்படலாம். இதற்கு பள்ளி கிடைப்பது ஒரு பிரச்னை. அப்படியே பள்ளி கிடைத்து பணியில் சேர்ந்தால், அங்கு இந்த ஆசிரியரின் சீனியாரிட்டி பாதிக்கப்படும். இடமாற்றம் கிடைக்காத பட்சத்தில் அதே பள்ளியில் "உபரி' என்ற ரீதியில் மன உளைச்சலுடன் பணியாற்றும் நிலை இருக்கிறது. மாணவர்கள் வருகை குறைவதற்கு, பள்ளிகளின் தரம் மட்டுமே காரணம் எனக் கூறிவிட முடியாது. குறிப்பிட்ட சில பிரபலமான தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையே, மேல்படிப்புக்கு சேர்க்க மறுக்கின்றனர். நன்றாகப் படிக்கும் மாணவர்களை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற மாணவர்களை வெளியேற்றும் அந்தப் பள்ளிகளை, கல்வித்துறை அதிகாரிகள் கண்டிக்க வேண்டும். இப்படிப்பட்ட பள்ளிகளுக்கு, கூடுதல் வகுப்புகள் தொடங்க அனுமதிப்பதால்தான், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.
அதேபோன்று, பள்ளிகளின் நிலையை உயர்த்துவதற்கு முன்பு அப்பகுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அறிந்து ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக கிராமப்புற பள்ளிகளை நிலை உயர்த்தும்போது, இந்த அளவுகோல் மிகமிக அவசியம். ஏனெனில் இன்றைக்கு பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் ஆங்கில வழி கல்விக்காக தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளியை நிலை உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. அதோடு, ஆசிரியர்களுக்குத் தான் நெருக்கடி ஏற்படுகிறது.
அரசு உதவிபெறும் பள்ளிகளைப் பொருத்தவரை, கிராமப்புறப் பள்ளி ஆசிரியர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டு, உபரி பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு துவங்க உள்ள நிலையில், ஆசிரியர்களின் நிலையை நன்கு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
கணக்கெடுப்பு முடிந்தபிறகு பள்ளிக் கல்வித் துறை உயர்அதிகாரிகளால் உபரி ஆசிரியர்கள் மீது அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் கூறினர். 

நன்றி தினமணி

facebook

திங்கள், 30 ஜூலை, 2012

ஓராண்டு பட்டம் செல்லாது - விளக்கம்

ஒரே ஆண்டில் 18 பாடங்களில் தேர்வு எழுதி பெற்ற பட்டப்படிப்புகள், பதவி உயர்வுக்கு செல்லாது என்ற பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற, மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். சீனியாரிட்டி, காலியிடங்களை பொருத்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். 
ஆசிரியர்கள் பலர் பதவி உயர்வுக்காக, மூன்று ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை, ஒரே ஆண்டில் 18 தாள்களையும் எழுதி தேர்ச்சி பெறுகின்றனர். 

தமிழகத்தில் சில பல்கலைக்கழகங்கள் இந்த வசதியை வழங்கி வருகின்றன. ஆனால், 10+2+3 என்ற அடிப்படையில் படிப்பை பூர்த்தி செய்வோருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன. இதற்கிடையே, ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த ஆசிரியர்களையும் சென்னையில் இன்று நடக்கும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அழைப்புக்கடிதம் அனுப்பி இருந்தது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது என்றும், அதுபோன்ற பட்டப்படிப்பை பெற்றவர்கள் பதவி உயர்வு பெற தகுதி இல்லாதவர்கள் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை திடீரென்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், ஒரே ஆண்டில் 18 தாள்களையும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, பிளஸ் 2 முடித்தவுடன் மூன்றாண்டு முறையான பட்டப்படிப்பு, பி.எட்., கல்வித்தகுதி பெற்றவர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கு தகுதி பெறுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபற்றி அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உடனுக்குடன் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 20 ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது, என்றார்.

முதுகலை ஆசிரியர் நியமனம் மதிப்பெண் கணக்கீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் என மொத்தம் 2,895 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த மே 27ம் தேதி நடந்தது.

மாநில அளவில் தமிழ் , 601, ஆங்கிலம் , 349, கணிதம் , 315, இயற்பியல் , 244, வேதியியல் , 222, தாவரவியல் , 204, விலங்கியல் , 197, வரலாறு , 170, புவியியல் , 24, பொருளாதாரம் , 246, வணிகவியல் , 275, அரசியல் அறிவியல் , 4, ஹோம்சயின்ஸ் , 5, இந்தியன் கல்சர் , 1, உடற்கல்வி இயக்குநர் நிலை1 , 36, தெலுங்கு , 1, உருது , 1 என காலி பணியிடங்கள் உள்ளன.

மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 27ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரே கட்,ஆப் மதிப்பெண் பெற்று பலரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த மதிப்பெண் 150 என்ற நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி, ஆசிரியர் பணி அனுபவம் ஆகியவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்பட்டு நேர்காணல் நடத்தப்படும். சீனியாரிட்டி என்பது 1,3 ஆண்டுகள் வரை 1 மதிப்பெண்ணும், 3 முதல் 5 ஆண்டுக்கு 2 மதிப்பெண் ணும், 5 முதல் 10 ஆண்டுகளுக்கு 3 மதிப்பெண்ணும், 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பணி அனுபவம் என்பது 1 முதல் 2 ஆண்டுகளுக்கு 1 மதிப்பெண்ணும், 2 முதல் 5 ஆண்டுகளுக்கு 2 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு மேல் 3 மதிப்பெண்ணும் என்று நிர்ணயம் செய்யப்பட் டுள்ளதாகத் தெரிகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு பற்றிய அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் கடிதம் மூலமும் தெரிவிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ழை மாணவர்களுக்கு 3 நாள் இலவச சுற்றுலா: எஸ்.எஸ்.ஏ. ஏற்பாடு-29-07-2012

எழுத்தின் அளவு :
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் சிறுபான்மையின (முஸ்லீம்) பிரிவை சேர்ந்த, 8ம் வகுப்பு பயிலும், 9,000 மாணவ, மாணவியர், ரயில் மூலம் இலவசமாக, மூன்று நாள் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் புதிய அணுகு முறைகளுக்கான கல்வித் திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கல்வி, பெண் கல்வி மற்றும் சிறுபான்மையினக் கல்வி ஆகிய தலைப்புகளின் கீழ், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரை தமிழகத்தின் சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்துடன் இணைந்து, சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு, மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
மாநிலம் முழுவதும், 9,000 மாணவ, மாணவியர், 900 பாதுகாவலர்களுடன் சுற்றுலா செல்லவுள்ளனர்.கல்வி சுற்றுலா செல்ல இருக்கும் இடங்கள்:
முதல்நாள்: சென்னை, கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, பிர்லா கோளரங்கம், மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா.
இரண்டாம் நாள்: திருச்சி, கல்லணை, முக்கொம்பு, ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, அருங்காட்சியகம், தஞ்சை பெரிய கோவில், சரஸ்வதி மஹால்.
மூன்றாம் நாள்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம், குமரி அம்மன் கோவில், கன்னியாகுமரி சர்ச், வட்டக்கோட்டை, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், மாவட்ட அறிவியல் பூங்கா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால்.
போட்டி: ஒவ்வொரு மாவட்டத்திலும், அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறை, வனத்துறை, சீர்மரபினர் நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறிய போட்டி நடத்தி, அதன் மூலம் சுற்றலா செல்வோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் நடனப்போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறும் மாணவ, மாணவியர், சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்கான உத்தரவை அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் முகமது அஸ்லம் பிறப்பித்துள்ளார்
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், நமது இணையதள முகவரியை எளிமையாக கையாள ஏதுவாக www.t-a-m-s.blogspot.com லிருந்து  www.tamsview.blogspot.com என்று முகவரி மாற்றம் செய்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துகொள்கிறோம். தொடர்ந்து இணைய சேவையில் உங்களோடு------ தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்-----

புதன், 25 ஜூலை, 2012

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு குறைவும் நியமன விதி குழப்பங்களும்



கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு  அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட சுமார் ஐம்பதாயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு முழுவதுமாக மறுக்கப்பட்ட நிலையிலையே பணியாற்றி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதிக்காக இரண்டு அலகுகலாக் பிரிக்கப்பட்டது

அதில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அடங்கிய தொடக்கக்கல்வி அலகும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அடங்கிய பள்ளிக்கல்வி அலகும் ஏற்படுத்தப்பட்டு தனித்தனி இயக்குனரகங்கள் அமைக்கப்பட்டன.இதனைத்தொடர்ந்து இத்துறையின்  உயர் பதவிகளான இயக்குனர்கள் ,இணை இயக்குனர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,மாவட்டக்கல்வி அலுவலர்கள்,மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஆகிய பதவி உயர்வுகளுக்கு அடிப்படைத்தகுதியாக உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி மூப்பின் அடிப்படையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளாக வரமுடியும் என கல்விப்பணி விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் என்கிற பணி நிலையில் உள்ள அலுவலர் பள்ளிக்கல்வி அலகில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை மூலமாக பதவி உயர்வு பெற்றவராக இருப்பார்.இதில் தொடக்கக்கல்வி அலகின் மாவட்ட நிர்வாக அலுவலரே பள்ளிக்கல்வி அலகிலிருந்து மாற்றுபணியில் நிர்வாக அலுவலராக பணிபுரிய பணிவிதியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தொடக்கக்கல்வி அலகில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர்கள் 2003 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நியமிக்கப்பட்ட பிறகும் இவர்களுக்கான பதவி உயர்வு வாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை என்பது ஏற்கனவே உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு முரணாக உள்ளது. தொடக்கக்கல்வி அலகில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் மேல்நிலைக்கல்வி பணிவிதிகளுக்குட்பட்ட முதுகலை ஆசிரியர் மூதுரிமையை பெற இயலாது.

ஆனால் இடைநிலை பணிவிதிகளுக்குட்பட்டு பணியாற்றும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு , வட்டார வளமைய மேற்பார்வையாளர் உள்ளிட்ட பதவி உயர்வுகளை பெற பணிவிதிகளில் இடம் உள்ளது.

தொடக்கக்கல்வி அலகிலும் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வாய்ப்பாக கருதப்படும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வையும் பெற இயலாத நிலையில் பதவி உயர்வு முன்னுரிமையில் நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகும்  அதிக ஊதிய விகிதத்தில் உள்ள பதவியையே எடுத்துக்கொள்ளவேண்டும் 36 a எனும் பணிவிதிக்கு விலக்கு அளித்து விட்டு தொடர்து பழைய நடைமுறையில்  மூதுரிமைபட்டியல் தயாரிக்கப்படுவதால் 2006 க்கும் முன்பு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர்களே தற்போது வரை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று வருகின்றனர்.


தற்போது அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் நிறைவடைவதற்குள் ஒரு சில நடுநிலைப்பள்ளிகளைத் தவிர பெரும்பாலான பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தபட்டுவிடும். தரம் உயர்த்தப்பட்டு பள்ளிக்கல்வி அலகிற்கு ஈர்த்துக்கொள்ளப்படும் நாளின் அடிப்படையிலேயே அந்த பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை இருக்கும்,இதில் அந்த நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தரம் உயர்த்தப்பட்ட அதே உயர்நிலைப்பள்ளியில் இளையவராகவே கருதப்படுகிறார்

.மேலும் இந்த ஆசிரியர் மாறுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போதும் ஈர்ப்பு செய்யப்பட்ட நாளின் அடிப்படையில் அவரது மூதுரிமை நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு தொடர்ந்து  ஈர்ப்பு செய்யப்பட்டு வருவதால் இவர்களுக்கான பதவி உயர்வு வாய்ப்பானது நடுநிலைப்பள்ளிகளில் தொடந்து குறைந்து வருவதாலும்,உயர்நிலைப்பள்ளிகளில் ஈர்க்கப்பட்ட தேதியின் அடிப்படையில் இருப்பதாலும் இவர்களது பதவி உயர்வு வாய்ப்பினை நியமன நாள் அல்லது ஆசிரிய தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் பெற இயலாத நிலையில் உள்ளனர்.


இதில் உரிய விதிமுறைகளை அரசு வகுத்து இந்த நிர்வாக குழப்படிகளை நீக்கி அவரவர் ஆசிரிய தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் மூதுரிமை பட்டியல் வெளியிட்டு நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வினை அரசு உரிய நடவடிக்கை எடுக்கு என நம்புவோம்....

பிரபலமான இடுகைகள்