புதன், 13 மார்ச், 2013

சிந்தித்து பார்ப்போம் ஆசிரியர்களே :



ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறையின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையை நிர்வாக வசதிக்காக  பொருத்தவரை இது தனது நிர்வாகத்தின் கீழ் தொடக்கக்கல்வி அலகு மற்றும் பள்ளிக்கல்வி அலகு எனும் இரு அலகுகளாக 1986 ஆம் ஆண்டு முதல்  செயற்பட்டு வருகிறது. 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடக்கக்கல்வித்துறையின் அனைத்து பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களும் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக ஈர்க்கப்பட்டு தற்போது வரை பள்ளிக்கல்வித்துறை செயலரின் கீழ் தொடக்கக்கல்வி இயக்குனரின் நிர்வாக அலகில் செயற்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.
   2003 ஆம் ஆண்டு முதல் முதல் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் அந்தந்த பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது என அரசு முடிவெடுத்து 2004 ஆம் ஆண்டு ஜூலை 1 தேதி முதல் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பள்ளிகல்வித்துறையின் மேல்நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும்  நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றுவதற்கு  ஆசிரியர் தேர்வு வாரியத்தேர்வின் பொதுவான தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
       இந்நிலையில் அரசின் கொள்கை முடிவின் மூலம் நடுநிலைப்பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்திற்காக நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து எவ்வித விதி திருத்தமும் இதுநாள் வரை பள்ளிக்கல்வித்துறையால் மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு இதுநாள் வரை நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களில்  எவரும் முறையான பதவி உயர்வு பதவியான முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நிலையை  பெற இயலவில்லை. அத்துடன் தற்போது அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மூலம் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளில்  பணியாற்றிய  பட்டதாரி ஆசிரியர்கள் 2004 ஆம் முதல் அதே பள்ளியில் பணியாற்றி இருந்தாலும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளியில் இளையவராகவே கருதப்பட்டு மாறுதல்,பதவி உயர்வு ,வருகைப்பதிவேடு ஆகியவற்றில் கடை நிலையிலையே வைக்கப்படுகிறார்கள்.
இதற்கு காரணாமாக கூறப்படுவது நடுநிலைப்பள்ளி வேறு அலகு உயர்நிலைப்பள்ளி  வேறு அலகு என்பது தான். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அரசின் கொள்கை முடிவை தொடர்ந்து நடுநிலைப்பள்ளிகளில்  நேரடி நியமனம் மூலம் புதிதாக பணியிடம் உருவாக்கப்படும் போது அதற்கான பதவி உயர்வு வழிமுறைகளை  உருவாக்காததன் விளைவாக தற்போது  அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்கள்  மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் ஈர்ப்பு செய்யப்படும்  பட்டதாரி ஆசிரியர்களிடம் தாம்  இத்துறையில் இளையவராக இருக்க சம்மதிக்கிறேன் என்ற ஒரு ஒப்புதல் கடிதத்தை பெற்று விட்டு, சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் அவர்களுக்கு  கிடைக்க வேண்டிய மூதுரிமை மறுக்கப்படுவதோடு  கடந்த ஆண்டு வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு பெற்றுள்ளவர்கள் தர எண்ணில் இளையவர்களாக இருந்தும் கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் 2005 ஆம் வரை  நியமிக்கப்பட்ட தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய முதன்மைப் பாடங்களை கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர்.
    ஆனால் 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்தேர்வில் தேர்வு செய்யப்பட்ட அதே பாட ஆசிரியர்கள் இதுநாள் வரை எவ்வித பதவி உயர்வையும் இதுநாள் வரை பெறவில்லை என்பதோடு இந்த 2013 – 14 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை ஆசிரியர் பட்டியலில் சேர்க்க இயலாது என்று  இவர்களின் விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவகங்களில் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டன.
   இந்நிலையில்  இந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பிதற்கான  வழிகாட்டுதல் நெறிமுறையில் இதே தொடக்கல்வி அலகில் பணியாற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்க ஏதுவாக தொடக்கக்கல்வி இயக்குனரிடம்  பட்டியல் கோரப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது .
    அதுமட்டுமின்றி அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் மூலம் 2011- 12 ஆம் கல்வி ஆம் ஆண்டு வரை 1254 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளுக்கு மேலானவை தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்நிலையில் இங்கே பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாய ஈர்ப்பு செய்யப்படும் நிலை உள்ளது என்பது நிதர்சனம்.      ஒரே தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒரு சாரார் தொடர் பதவி உயர்வு வாய்ப்புகளை தொடர்ந்து  பெறுவதும் ஒரு சாராருக்கு  பழைய விதிமுறைகளை காரணம் காட்டி மறுப்பதும் இயற்கை விதிக்கு முரணானது. இது போன்ற சூழ்நிலையில் எவ்வித பதவி உயர்வையும் பெற இயலாமல் வாய்ப்பு மறுக்கப்படும் நிலையை அரசு உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இது போன்று பதவி உயர்வு  வாய்ப்பு தொடர்ந்து நழுவிப்போவதால் நாம்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
 மேலும்  சமத்துவம் சமநீதியை போதிக்கும் ஆசிரியர்களாகிய நாமே  நீதி கிடைக்க போராட வேண்டியுள்ளது......இந்த போராட்டத்தில்  வெற்றிகாண  இணைவோம்........
    
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 

வியாழன், 7 மார்ச், 2013

தாவரவியல், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கோரிக்கை


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி) நடத்திய போட்டி தேர்வில் ஓராண்டாகியும், தாவரவியல், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.ஆர்.பி தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுகள் நடத்தப்பட்டன.
டி.ஆர்.பி., தாவரவியல் பாடப்பிரிவு எடுத்தவர்களை தவிர பிற பிரிவுகள் எடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை தாவரவியல் முதுகலை பட்டதாரிகளுக்கு எந்த அழைப்பும் வராதததால் மிகுந்த மன வருத்தத்தை அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.http://dinamani.com/education/education_news/article1491975.ece

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் ஓய்வு


டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், வரும் 12ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய தலைவர் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான நடராஜ், கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருப்பவர்கள், 62 வயது அல்லது ஆறு ஆண்டுகள், இதில், எது முதலில் வருகிறதோ, அதுவரை பதவியில் இருக்கலாம்.
அதன்படி, நடராஜ், 62, பதவிக்காலம், வரும் 12ம் தேதியுடன், முடிவுக்கு வருகிறது. கடந்த, 13 மாதங்களில், தேர்வாணைய நிர்வாகத்தில், பல்வேறு சீரமைப்புகளை, நடராஜ் செய்துள்ளார், வெளிப்படையான நிர்வாகத்தை தருவதுடன், பல்வேறு சீர்திருத்தங்களும் கொண்டு வரப்படும் என, பதவி ஏற்ற போது, நடராஜ் தெரிவித்தார்.
அதன்படி, வீடியோ கேமரா கண்காணிப்புடன் நேர்முகத் தேர்வு, தேர்வு மையங்களில், வீடியோ கண்காணிப்பு, தேர்வுகளுக்கு, ஆன்-லைன் பதிவு முறை, தேர்வர்களுக்கு, நிரந்தர பதிவு எண்கள், தேர்வர்களின் மதிப்பெண்களை, இணையதளத்தில் வெளியிடுதல், தேர்வு பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடத்தி, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில், துறைகள் ஒதுக்கீடு என, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தினார்.
மேலும், 13 மாதங்களில், அதிக அளவில், அரசுப் பணிகளுக்கு, தேர்வுகளும் நடத்தப்பட்டன. கடந்த ஒரு ஆண்டில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசுத் துறைகளிடம், காலி பணியிடங்கள் விவரங்களை பெற்று, அவற்றை உடனுக்குடன் நிரப்புவதில், நடராஜ், தீவிர ஆர்வம் காட்டினார்.
துணை கலெக்டர் அந்தஸ்து உடைய, வேளாண் அலுவலர் பணியில், 454 பேர், சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். இவ்வளவு பேரை, இதற்கு முன் பணி நியமனம் செய்தது கிடையாது என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பல ஆண்டுகளாக, பணி நியமனமே நடக்காத, பல்வேறு துறைகளை கண்டறிந்து, அங்குள்ள காலி பணியிடங்களை நிரப்புவதிலும், நடராஜ் வேகம் காட்டினார். இப்படி பல்வேறு செயல்பாடுகள் காரணமாக, சரிந்து கிடந்த தேர்வாணையத்தின் பெயரை, தூக்கி நிறுத்தி உள்ளார்.
இரண்டாவது முறை, பணி நீட்டிப்பு செய்ய, தற்போது, தேர்வாணைய விதிமுறைகளில் இடம் இல்லை. அப்படி, நீட்டிப்பு செய்ய வேண்டும் எனில், பார்லிமென்ட் வரை செல்ல வேண்டும். இதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், பதவியில் இருந்து, நடராஜ் விடைபெறுவது உறுதியாகி உள்ளது.

வெள்ளி, 1 மார்ச், 2013


அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்

வேலாடிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி ராமனின் அரிய கண்டுபிடிப்பான ஒளிச்சிதறல் பற்றி அவர் உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28ம் தேதி என்று கருத்தரங்கில் பேசிய அறிவியல் இயக்க மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.இந்திய கண்டுபிடிப்பாளர்களின் சாதனைகள், இந்திய அறிவியல் வரலாற்றில் தமிழர்களின் ஆளுமை பற்றி ஆசிரியர் ரமேஷ்குமார், விண்வெளியில் இந்திய பெண்களின் சாதனைகள் என்ற தலைப்பில் ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு உறுப்பினர் இளையராஜா ஆகியோர் பேசினர். 
எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.பள்ளி ஆசிரியர்கள் நிர்மல் ராஜ், சுகந்தி, கணேசன், குணசேகரன், மஞ்சுளா, பார்த்தசாரதி, மாரியய்யா, வினோதினி, ஷீபாஹெலினா, கவிப்பிரியா, தேன்மொழி, வெள்ளாளவிடுதி மற்றும் வேலாடிப்பட்டி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 
அறிவியல் ஆசிரியர் பெருமாள் வரவேற்றார். ஆங்கில ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

தினகரன் நாளிதழ் செய்தி                      தினமணி நாளிதழ்செய்தி 

பிரபலமான இடுகைகள்