வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

106 கோடி மதிப்புள்ள பள்ளிக் கல்வித்துறை திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

பள்ளிக் கல்வித்துறைக்கான 106 கோடி மதிப்புள்ள திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு தரமான கல்வி அளிப்பதோடு, படிக்கும் சூழலை மேம்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், மாத்தூரில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள 109 அரசு பள்ளிகளில் 97 கோடியே 64 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள்;

மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் வாசிப்புத்திறனை அதிகரிப்பதற்காக கோயம்புத்தூர் மாவட்ட நூலகத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு வசதிகளுடன் கூடிய தனிப்பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு;

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியினை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகம்;

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் ஆகிய அலுவலகங்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ள கல்வி வளாகம், என 102 கோடியே 69 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள், நூலகக் கட்டிடங்கள், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டக்கல்வி அலுவலகம், திருவள்ளூர் கல்வி வளாகம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மாவட்ட நூலகங்களை சிறப்பான முறையில் மேற்பார்வையிட வேண்டும் என்ற கருத்துடன் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 32 மாவட்டங்களிலுள்ள மாவட்ட நூலக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் அடையாளமாக ஒருவருக்கு மடிக்கணினியை வழங்கினார். பள்ளி அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவியருக்கு 19 ஆயிரத்து 200 ரூபாய் பரிசுத்தொகை வழங்குவதன் அடையாளமாக ஒரு மாணவிக்கு பரிசுத்தொகையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் இறக்க நேரிட்டால் அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தால், அவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அக்குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச்செலவு, பராமரிப்பு செலவிற்காக 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நிரந்தர வைப்பு நிதியாக வழங்கும் திட்டத்தை ஏற்கனவே முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருந்தார்.

அதன்படி, 2011–12 மற்றும் 2012–13–ம் கல்வி ஆண்டுகளில் மொத்தம் 720 மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாயை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

2013–14–ம் கல்வியாண்டில் 360 மாணவ மாணவியர்களுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதன் அடையாளமாக ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்கான பத்திரத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593 பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 2 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாக ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக ஒருவருக்கு பணி நியமன ஆணையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கும் பொருட்டு மாநில அரசால் இணைய தளம் வாயிலாக பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் புதிய திட்டத்தைத் தொடக்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 288 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 44 ஆயிரத்து 800 மாணவ மாணவிகள் பயன் பெற்றிட பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து 24 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

முதற்கட்டமாக ஆயிரத்து 600 பள்ளிகளில் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டிடத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

ஆக, மொத்தம் பள்ளிக் கல்வித்துறையில், 106 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பள்ளிக் கட்டிடங்கள், நூலகங்கள், கல்வி அலுவலகம், கல்வி வளாகக்கட்டிடம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி, பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை துவக்கி, ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டிடத்தை வெளியிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்