செவ்வாய், 31 ஜூலை, 2012

பறப்பேன்,பறப்பேன் பறந்து கொண்டே இருப்பேன் : கலாம்



அன்பு மாணவச் செல்வங்களே,  உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.  தேர்வு முடிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும் என் அறிவுச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.  அன்பு மாணவச் செல்வங்களே, உங்கள் அனைவருடனும் நான் எழுதிய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களைச் செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒரு போதும் தவழ மாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

                                     பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழி வகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்? நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும். நீ யாராயிருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய். பினாச்சியோ என்ற கவிஞர் சொல்கிறார்-நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.

                             என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை, உழைத்துக் கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.

இதுவரை கடந்த 12 ஆண்டுகளில், நான் 1.2 கோடி இளைஞர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்கிறேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்கள் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் என்ஜினீயர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அலுவலர், ஆசிரியர், தொழில்முனைவோர் ஆகப் போகிறீர்கள் என்று கேட்டேன். சுமார் நூறு பேர் கையைத் தூக்கினார்கள். எத்தனை பேர் சந்திரனுக்கும், வியாழன் கிரகத்திற்கும், போக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். அனைவரும் கையைத் தூக்கினார்கள்.

                                                    எத்தனை பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். 50 பேர் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள். அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம், நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு மாணவன், இந்தியாவை 10 ஆண்டுகளுக்குள் வளர்ந்த இந்தியாவாக மாற்றுவேன் என்று சொன்னான், ஒரு மாணவி சொன்னாள், லஞ்சத்தை ஒழிப்பேன் என்று. இன்னொரு மாணவன், இளைய சமுதாயத்துக்கு, "என்னால் முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்து, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன் - அப்படியென்றால் இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்' என்ற நம்பிக்கையைக் கொடுப்பேன் என்று கூறினான். எங்கு சென்றாலும் இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன்.

                                                                 நீ தனித்துவமானவன்: தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பைப் பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் விமானங்களைப் பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியைப் பார்க்கும்போது அலெக்ஸôண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.

                                                              ஏன் கடலின் நிறம் நீலமாக இருக்கிறது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனிலிருந்து கொல்கத்தாவிற்குப் பயணம் செய்யும்போது ஒரு விஞ்ஞானிக்கு அந்தக் கேள்வி வந்தது. அந்தக் கேள்விக்கான பதில்தான் "ஒளிச்சிதறல்". அதுதான் ராமன் விளைவிற்கான நோபல் பரிசை சர். சி.வி. ராமனுக்குப் பெற்றுத் தந்தது. இந்த நூற்றாண்டில் அகிம்சா தர்மம் என்ற கத்தியில்லா, ரத்தமில்லா ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று, உலகிற்கே அகிம்சா தர்மத்தைப் போதித்தவர் மகாத்மா காந்தியடிகள். ஆக, ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள்.

                                                                                       இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால், இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது, ஏனென்று தெரியுமா? உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் தனித்துவமானவன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். விவேகானந்தர் சொன்ன இரண்டு விஷயங்கள் என் நினைவுக்கு வருகிறது.

My name should not be made prominent.
It is my ideas that I want to see realised.

எனது பெயர் பிரபலபடுத்தப்படக்கூடாது, எனது ஆலோசனைகளும் தத்துவங்களுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

All power should not be made prominent.
It is my ideas that I want to see realised.

அப்படி என்றால், உன்னிடம் உள்ள திறமையை எண்ணிப்பார். எழுந்து உன் ஞானத்தை வெளிப்படுத்து. அதன் மகத்துவத்தை நீ உணர்ந்த அடுத்த நிமிடம் உலகம் உன்னிடம் வசப்படும். என்ன ஓர் அருமையான கருத்து.மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களைச் சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத் திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தித் திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர்.
ஆனால், நாட்டில் பெரும் சதவிகிதம் பேர் படிப்பின் பல்வேறு நிலைகளில் கல்வி கற்க இயலாத சூழ்நிலையில் மற்ற வேலைகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கு ஆளாகின்றனர். நாட்டில் இன்றைய சூழ்நிலையில் பல்வேறு கவனச் சிதறல்கள், வறுமை, படிப்பிற்கேற்ற வேலை, வேலைக்கேற்ற படிப்பும், சிறப்பு பயிற்சியும் இல்லாத சூழல். உலகமயமாக்கலினால் ஏற்படும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேற்றுமை, மாறி வரும் குடும்பச்சூழல், மாற்றுக் கலாசார மாற்றம் நம் இளைஞர்களை வேகமாக மாற்றும் சூழல் இன்றைக்கு நாட்டில் நிலவுகிறது. இத்தனையும் தாண்டி நமது நாடு, நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டிற்கேற்ற வளர்ச்சி முறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பழக்க வழக்கங்கள், இவைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கால முறைக்கு ஏற்றாற்போல் நம்மை நாம் அறிவுப்
பூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும். நாம் நமது முகவரியை இழக்காமல் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். பணி செய்து கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும்போது நமக்கு வாழ்வில் ஓர்  லட்சியம் வேண்டும். அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும்பெரும் லட்சியங்கள் தோன்றும். பெரும் லட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.

அமைதியைத் தேடி...
சுமுகமான, மேடு பள்ளம் இல்லாத ஓர் அறிவார்ந்த, அமைதியான, மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்ற தேடலின் ஒரு பகுதியாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். 2003-ம் ஆண்டு, நான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில், 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தவாங் என்ற இடத்திற்குச் சென்றேன். ஒரு நாள் முழுதும் இருந்து, அங்கு புத்த பிட்சுகளைச் சந்தித்தேன். கடுமையான குளிரில், வாழ்வதற்கு மிகவும் சிரமப்படக்கூடிய சூழல் இருக்கும் அங்கு அனைவரும் சிரித்த முகத்துடன் புன்னகை தவழ வீற்றிருப்பது கண்டேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு எப்படி சந்தோஷமும், சாந்தியும் நிலவுகிறது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அங்கிருக்கும்
தலைமை புத்த பிட்சுவிடம் கேட்டேன், இது எப்படி சாத்தியமாகும் என்று. அதற்கு அவர், நீங்கள் நாட்டின் குடியரசுத் தலைவர். உங்களுக்குத் தெரியாதா? என்றார். நான் விடவில்லை. இல்லை, நீங்கள் எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அதற்கு அவர் சொன்னார். இந்த உலகத்தில், நமக்குப் பல்வேறு பிரச்னைகள் - நம்பிக்கையின்மை, சுயநலம், சமூக, பொருளாதார வேறுபாடு, கோபம், வெறுப்பு அதன் மூலமாக வன்முறை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், புத்ததவஸ்தலம் என்ன செய்தியைப் பரப்புகிறது என்றால், நாம்  ஒவ்வொருவரும் "நான், எனது' என்ற எண்ணத்தை நம் மனதிலிருந்து அகற்றினால், நம்மிடம் உள்ள தற்பெருமை மறையும். தற்பெருமை மறைந்தால், மனிதர்களுக்கு இடையேயான வெறுப்பு அகலும். வெறுப்பு நம் மனதைவிட்டு அகன்றால், வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு அகலும். வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு மறைந்தால், அமைதி நம் மனத்தைத் தழுவும். என்ன ஓர் அருமையான விளக்கம்! ஆனால் "நான், எனது" என்ற எண்ணத்தை எப்படி நம் மனதிலிருந்து அகற்ற முடியும்? எவ்வளவு கஷ்டமான விஷயம். இதற்கான பக்குவமான கல்வி முறையை எப்படி நாம் கொண்டு வருவது என்பதுதான் நம்மிடையே உள்ள சவால். அந்த சவாலை எப்படி சமாளிப்பது, அமைதியை எப்படி அடைவது? என்ற என் கேள்விக்கு விடை தேடிய என் பயணம் தொடர்ந்தது.

பல்கேரியா நாட்டிற்குச் சென்றேன். அங்கு கிறிஸ்தவதவஸ்தலத்திற்குச் சென்றேன். தவாங்கில் கிடைத்த செய்தியின் தொடர்ச்சியாக, அங்கு உள்ள பாதிரியார் ஒரு வாக்கியத்தைத் தந்தார். மன்னிப்பு என்ற உன்னதமான வாக்கியத்தைத் தந்தார். மன்னிப்பு என்பது எப்படி ஒரு வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும் என்பதைப் பற்றிய அருமையான
விளக்கம் பெற்றேன்.

அதன் தொடர்ச்சியாக விவேகானந்தரது பிறந்த இடத்திற்குச் சென்றேன். எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது, அங்கு எனக்குக் கிடைத்த பதில் என்னவென்றால் - கொடை. அதாவது கொடுக்கும் குணம். கொடையும் இத்தனை குணங்களுடன் கூட இருந்தால் நாட்டில் அமைதிக்கு அது வித்திடும் என்பதாகும். இந்தத் தகவலோடு அஜ்மீர் ஷரீப் சென்றேன். அங்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்றேன். அங்கு இருந்த சுஃபி பெரியவரிடம் இதே கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் "ஆண்டவனின் படைப்பில் தேவதையும் உண்டு, சாத்தானும் உண்டு. நல்ல எண்ணங்கள், நல்ல செயல்களுக்கு வித்திடும். நல்ல செயல்கள் அன்பை வளர்க்கும். அன்பு அமைதிக்கு வித்திடும்' என்றார். நல்ல செயல்களைப் பற்றி எண்ணும் பொழுது காந்திஜி வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி: காந்திஜியின் 9-வது வயதில், அவரது தாயார் அவருக்கு ஓர் அறிவுரை தந்தார்: மகனே, உனது வாழ்வில், துன்பத்தில் துவளும் யாராவது ஒருவர் வாழ்வில் நீ ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அவரைத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து,   முன்னேற்றப்   பாதையில் கொண்டு சென்றால், நீ மனிதனாகப் பிறந்ததன் முழுப் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்பொழுதும் உனக்கு அருள் செய்வார். இது பூமியில் பிறந்த அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரை ஆகும்.

மனசாட்சியின் மாட்சி
சமீபத்தில் சுவாமி சமர்ப்பண் எழுதிய "Tiya  : A Parrot's Journey Home' என்ற நூலைப் படித்தேன். சில புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. எனக்கு மிக நெருக்கமானவை. அந்தப் புத்தகங்கள் எனது தனிப்பட்ட நூலகத்தை அலங்கரிக்கும். அப்படி ஒரு புத்தகம்தான் இது. தியா என்ற புத்தகம் மனசாட்சியைப் பற்றி இருப்பதால், நம் ஒவ்வொருவரையும் தொடுகிறது. இதை மிக அழகாக எழுதியிருக்கிறார் சுவாமி சமர்ப்பண். ஓர் அருமையான பச்சைக்கிளியின் வாழ்வு, தியாவின் வாழ்க்கையை மாற்றியது என்பதுதான்.

கோபம் விவேகத்திற்கு அழகல்ல. இதைப் பச்சைக் கிளி மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை. ஆனால், இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணர்வார்கள். என்னைக் கவர்ந்த ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால்,

உன்னைப் பற்றி நீ உணர்ந்ததைக் காட்டிலும்
நீ மேலானவன் என்பதை உணர்.
உன்னைப் பற்றி நீ உணர்ந்த அடுத்த விநாடி, உனது செயல்
நீ எண்ணியதைக் காட்டிலும் மேலாகச் சாதிக்க வைக்கும்

எப்படி நாம் நமது மனசாட்சியைப் பக்குவப்படுத்துவது என்று என்னை நானே கேட்டேன். மனசாட்சி நம்மை நல்வழிக்கும் இட்டுச் செல்லும். இல்லை என்றால், அது விரும்பிய வழிக்கும் இட்டுச் செல்லும். கிளிக்குக் கிடைத்த அருமையான செய்தி என்ன? அற்பக் காரியங்களுக்காகக் கண்ணீர்விட்டுப் பொழுதைக் கழிப்பதைக் காட்டிலும், வாழ்க்கையில் செய்ய வேண்டிய நல்ல
காரியங்கள் அதிகம். இப்படிப்பட்ட இடத்தைவிட்டு வெளியேறு சீக்கிரம். என்ன அருமையான செய்தி! எண்ணம் பெரிதாக இருந்தால் நம்மால் சாதிக்க முடிவது அதிகம்.

சுவாமி சமர்ப்பண் எழுதிய புத்தகம் என் மனதை மகிழச் செய்தது. மனசாட்சியின் மனதைப் பற்றி அறிந்து கொள்ள உதவியது. மனசாட்சி என்பது, இதயத்தின் ஆத்மா, மனித இதயத்தில் இருந்து சுடர்விட்டு வழிகாட்டும் ஒரு பேரொளி. வாழ்க்கை எப்படி உண்மையோ அதைப் போன்றது அது. நேர்மைக்குப் புறம்பாக சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக் காட்டும். மனசாட்சி என்பது நமது பாரம்பரியத்தில் வந்துதித்த ஒன்று. தப்பையும், சரியானவற்றையும் நமக்கு சரியான நேரத்தில் உணர்த்தும் ஓர் அறிவார்ந்த மரபணு உண்மை. நமது குற்றங்களைப் பதிவு பண்ணும் ஒரு வாழ்க்கைப் புத்தகம். சார்பற்ற சாட்சியாக மனசாட்சி விளங்குகிறது. அது நம்மை பயமுறுத்தும், நம்பிக்கையைக் கொடுக்கும், பாராட்டும்,
தண்டனை அளிக்கும், நம்மைக் கட்டுக்குள் வைக்கும். ஒரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை.

மறுமுறை உறுத்தினால் தண்டனை. கோழை கேட்பான், இது பாதுகாப்பானதா? பேராசைக்காரன் கேட்பான்- இதனால் எனக்கு என்ன லாபம் என்று. தற்பெருமைக்காரன் கேட்பான், நான் மகானாக முடியுமா என்று. இச்சையானவன் கேட்பான், அதில் என்ன சந்தோஷம் உண்டு என்று. ஆனால் மனசாட்சி ஒன்றுதான் கேட்கும் - அது சரியா என்று. ஆனால் ஒட்டுமொத்தமான பதில் என்ன? தன் மனசாட்சிப்படி நேர்மையாக நடப்பது ஒன்றுதான். இதிலிருந்து என்ன விளங்குகிறது என்றால், சிறு வயதில், இளம் மனதில் விதைக்கும் விதை எப்படிப்பட்ட பலனைத் தருகிறது என்பதற்கு நம்மில் அனேக உதாரணங்கள் உள்ளன. எனவேதான் நாம் நமது இளைஞர்களைப் பக்குவப்படுத்தி, தயார் பண்ணினால்தான் நமது லட்சியமான, வளமான இந்தியாவை 2020க்குள் மாற்ற முடியும்.

அறிவு அற்றம் காக்கும்
எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்தது ஒரு குறள்தான். எனக்குப் பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்குவளம் கொடுத்தது. அது இது தான்...

அறிவற்றங் காக்குங் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

அதாவது, அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல்,
அதாவது கோட்டை போல் நின்று நம்மைக் காக்கும் என்பதாகும்.

பூமிக்குக் கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைக் காட்டிலும், மனஎழுச்சி கொண்ட இளைஞன்தான் மிகப் பெரிய சக்தி. இந்தியா 60 கோடி இளைஞர்களைப் பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா. எனவே மக்கள் தொகை ஒரு வகையில் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. மாணவர்களே! உறக்கத்திலே வருவதல்ல கனவு.
உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. எனவே கனவு காண்பது என்பது ஒவ்வொரு குழந்தையின், இளைஞரின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேறக் கடுமையாக உழைக்க வேண்டும், தொடர்ந்து அறிவைப் பெற, அதை தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால்   கனவு நனவாகும்.

நீங்கள் எல்லாம் வெற்றியடைவீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

நன்றி தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்