சனி, 14 மார்ச், 2015

அரசுப்பள்ளியை காப்போம்...!

தமிழகத்தில்  இன்று அரசுப்பள்ளிகள்  தங்களை  நிலை நாட்டிக்கொள்ள  போராட வேண்டியுள்ளது ஆனால்  தனியார்  பள்ளிகளின் கவர்ச்சிமிகு விளம்பரங்களை கண்டு கனியாத  பெற்றோரே இல்லை எனலாம்...! சிறப்பான பயிற்சி ...மாநிலத்தில்  முதலிடம் ...!! கணினி.... யோகா.... நாட்டியம்..... கராத்தே.....என்று தங்களால்  இயலாதவற்றை   தம் பிள்ளைகள் மூலம் சாதிக்க வேண்டும் என்று ஏங்கும் பெற்றோர்களுக்கு ஆபத்தாண்டவனாய்  கண் முன்னே தெரிபவை பிரமாண்ட கட்டிடங்களும் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பறையும் அட்மிஷன் செல்பவர்களுக்கு கொடுக்கப்படும் கொட்டைக்கூழ் காபியும் தான்....

படிச்சா இங்கேதான் படிக்கணும் ஏம்புள்ளைய எம்புட்டு சிரமப்பட்டாலும் இங்கேதான் சேக்கணும்...சில லட்சங்கள் செலவானாலும் பரவாயில்லை என்று நடுத்தர குடும்ப பெற்றோரே முடிவெடுக்கும் போது பணக்கார அப்பாக்களும் அம்மாக்களும் ஆன் தி ஸ்பாட் அட்மிஷனையே விரும்புகின்றனர்......

காலையில் ஏழுமணிக்கெல்லாம் வேன் வந்துரும் ....ஷூ  லேச ஒழுங்கா  கட்டி  வுடணும் இல்லன்னா  புள்ளைக்கி பைன் போட்ருவாங்க ....ஏம்புள்ள பேசற இங்லீஸ் அவுங்க அப்பாவுக்கே தெரியல.....என்று அம்மாக்கள் பக்கத்துக்கு வீட்டில் அங்கலாய்க்கவும்  உறவினர்கள்  மத்தியிலும் ஊரார்  மத்தியிலும் பெருமை பேசவும்  ஒரு கூடுதல் பலம்.....

இது இப்படியிருக்க அரசாங்க பள்ளியில் படிக்கிற பசங்களோட பெற்றோர் எந்த அக்கறையையும் காட்டாமல்  ஏனோ தானோவென்று இருப்பதோடு தம் பிள்ளையின் கிழிந்த சட்டையையும்  பொத்தானையும் தச்சு கொடுக்கக்கூட நேரமின்றி வயல்களிலும் கட்டுமான பணிகளிலும் சாலை சீரமைப்பு பணியிலும்  பக்கத்து மாவட்டக்கரும்புவெட்டு  கூலியாகவும் உழைத்து உழைத்து ஓடாகிக்கொண்டே  இருக்கிறார்கள் என்பது அரசுப்பள்ளி மாணவர்களிடையே தன்னம்பிக்கை இன்மைக்கும் சுய மதிப்பு தாழ்ச்சிக்கும் இடமளித்துவிடுகிறது....

அரசுப்பள்ளியில் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகளும் விலையில்லா எழுது பொருட்களும் காலணியும் பலவகை உணவும் மிதிவண்டியும் மடிக்கணினியும் ஒருவித பொருள் சார் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பெற்றோர்களின் மனதில்  நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்ற மனப்போக்கை வளர்த்துவிட்டுள்ளதோடு
பெற்றோர் மகன் மகள் உறவில் விரிசலையும் உருவாக்கி நீங்க என்ன செஞ்சீங்க.....என்று பிள்ளைகள் பதில் கேட்க வைத்துள்ளது.....

இது இப்படியிருக்க பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களுக்கு  வழங்கப்படும் தொடர் பயிற்சிகளால் மனம் உடைந்து பள்ளிக்கு பாதியிலேயே முழுக்குப்போடவே விரும்புகின்றனர் .  நூறு சதவீத தேர்ச்சியே குறிக்கோள் என்று செயற்படும் தனியார் பள்ளிகளின் போட்டி வலையில் சிக்கியுள்ள அரசுப்பள்ளிகளுக்கு முழுத்தேர்ச்சி முழுச்சவலாய் உள்ளதோடு அலுவலர்களின் நெருக்கடி மூச்சு முட்ட வைத்து விடுகிறது.....எனினும் பல்வேறு சமூக பொருளாதார நெருக்கடிகளையும் மீறி சாதிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் சமூக அக்கறையுள்ளவர்களாக  வருகிறார்கள் என்பதுதான் கூடுதல் நம்பிக்கை.

தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகள் ஒற்றை இலக்கத்தில் இயங்குவதாக புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன. இப்பள்ளியில் பயில வேண்டிய  மாணவர்கள் அருகாமை தனியார் பள்ளிகளில் அடகுவைக்கப்பட்டு விடுகின்றனர் என்பதுதான் வேதனை...சரி நுனி நாக்கில் இங்க்லீஸ் .. டை ஷூ....இதெல்லாம் இங்கே உண்டா...?  என்று கேட்பவர்கள்  நம்மூரு பள்ளிக்குள் ஒருமுறை கூட சென்று பார்க்கவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம் ......தற்போது அனைத்துவகை தொடக்கப்பள்ளிகளிலும் மேற்சொன்ன அனைத்து பயிற்சிகளும்  முறையாக பயிற்றுவிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.....

நம்மூரு வெப்பநிலைக்கு ஷூவும் ....டையும்.....தேவையா...? என்பதை சிந்திக்க வேண்டும்....நீட்னஸ் பத்தாது என்று சொல்பவர்கள் தினமும் பள்ளிகளில் வழங்கும் உடற்பராமரிப்பு பயிற்சியை பார்க்க வேண்டும்....இதுமட்டுமின்றி தாய்மொழியை பிழையில்லாமல் உச்சரிக்கவும் ஆங்கிலத்தை அடிப்படையோடு சொல்லிக்கொடுப்பதிலும் அரசுப்பள்ளிகள்  அசரவைக்கின்றன....

தன் பிள்ளையை பள்ளி  வாகனத்தில் அனுப்பி  டாட்டா  காட்ட நினைப்பவர்கள்.......கும்பலாய் பிதுங்கிக்கொண்டு செல்லும் தானிகளில் அனுப்பவதற்கு பதிலாக  தனி தானியில்(ஆட்டோ) பெருமையாக  அனுப்பலாமே ....

சிந்திப்போம் அரசுப்பள்ளியில் சேர்ப்போம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்